skip to main |
skip to sidebar


ராமன் ஒரு தோட்ட வேலைக்காரன். அவனுக்குத் தன் நண்பர்களைப் பார்க்கும் போதெல்லாம் பொறாமையாக இருக்கும். ராமனுடன் படித்த அவர்கள் எல்லாம் நல்ல வேலையில் இருந்தனர். அதில் முன்னேறிக் கொண்டும் இருந்தனர். இதனால் தான் மட்டும் இப்படித் தோட்ட வேலைக்காரனாகி விட்டோமே என்ற கவலை ராமனை அரித்துக் கொண்டே இருந்தது. படிக்கும் காலத்தில் ராமன் ஓவியம் வரைவதில் திறமைசாலியாக இருந்தான். ஆனால் ஓவியம் வரைந்து விற்றால் போதிய வருமானம் கிடைக்காது என்று அவன் நினைத்தான். இதனால் அவன் தோட்ட வேலை கற்றுக் கொண்டால் பண்ணையார் ஆகிவிடலாம் என்று நம்பினான்.தோட்ட வேலைக்காரன் ஆன பிறகும் எந்த முன்னேற்றமும் வரவில்லை என்பதே ராமனின் கவலையாக இருந்தது. ஒருநாள் அவனுடைய முதலாளி பாத்திரங்கள் வாங்க வெளியூர் சென்றார். உதவிக்கு ராமனை அழைத்துச் சென்றார். சென்ற இடத்தில் ராமன் தேர்வு செய்த பாத்திரங்களைப் பார்த்து முதலாளியே அசந்து போனார். காரணம், ராமன் எடுத்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் கலைநயம் மிக்கதாக இருந்தன. முதலாளி கேட்டதற்கு, நீண்ட தயக்கத்திற்குப் பிறகு ராமன் தனக்கு நன்றாக ஓவியம் வரையத் தெரியும் என்று கூறினான்.அவனுடைய முதலாளி நல்லவர். நகரத்தில் உள்ள புகழ்பெற்ற ஓவியக் கடையில் அவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். அதிலிருந்து ராமனின் கவலைகள் ஒழிந்தன என்பதை விளக்கத் தேவையில்லை. ராமனைப் போலத்தான் நம்மில் பலரும் உள்ளோம். நம்மிடம் உள்ள திறமையின் மீது நாம் நம்பிக்கை வைப்பதில்லை. உடனடி வளர்ச்சிக்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம்.இதனால் தான் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு கால் சென்டருக்குப் போவதும், பொருளாதாரம் படித்துவிட்டு அதற்குச் சற்றும் தொடர்பில்லாத அச்சகப் பணிகளுக்குப் போவதும் தொடர்கிறது. இவ்வாறு போனவர்கள் சில ஆண்டுகளில் வேலையில் ஆர்வம் குறைந்து வாழ்க்கை வெறுத்துப் புலம்பத் தொடங்கி விடுகின்றனர்.ராமனுக்காவது வழிகாட்டியாக அவனுடைய பெருந்தன்மையான முதலாளி கிடைத்தார். ஆனால் நம்மில் பலருக்கு அப்படி யாரும் இல்லை. இதனால் இந்தப் புத்தாண்டில் யோசிப்போம். நாம் இழந்துள்ள நம்முடைய அடையாளத்தை, அடையாளமான திறமையைத் தேடுவோம். முடிந்தவரை அதற்கு உரமிட்டு நம் வாழ்வை வளமாக்க முயற்சிப்போம்...
புத்தாண்டு வாழ்த்து.........
அந்நாட்களில் யூத மதவாதிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் எப்பொழுதும் இயேசுவிற்கு எதிராகவே செயல்பட்டு வந்தனர். காரணம் இயேசு வாழ்க்கைப் பாதையில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடி வந்தார். எனவே இயேசுவை தந்திரமாக பிடித்து கொலை செய்ய முடிவு செய்தனர். இதன்படி இயேசுவைப் பிடிக்க அவருடன் இருந்த பன்னிரு சீடர்களில் ஒருவரான யூதாசுக்கு (துரனயள) பெருந்தொகையை கொடுத்தனர். யூதார் நள்ளிரவில் இயேசு இருக்கும் கெத்சமனே தோட்டத்திற்கு சென்றான். அவன் பின்னே ஒரு கூட்டமும் சென்றது. தவறுதலாக வேறு யாரையும் காட்டிக் கொடுக்காமலிருக்க முன் கூட்டியே திட்டமிட்டு இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்தான். இயேசுவின் அன்பு : மக்கள் கூடி விட்டனர். அங்கு சூழ்ந்திருந்தவர்களில் ஒருவன் பட்டயத்தை உருவி இயேசுவை பிடிக்க வந்த பிரதான ஆசாரியரின் வேலைக்காரனுடைய காதை வெட்ட, இயேசு அவனை தொட்டு சுகமாக்கினார். வெட்டியவனை நோக்கி "பட்டயத்தை உரையில் போடு, பட்டயத்தை எடுக்கிறவன் பட்டயத்தால் அழிவான்" என்றார். உலகம் கைவிடுதல் : இயேசு பிடிக்க வந்தவர்களை நோக்கி கள்வனைப் பிடிக்க வருவது போல் வந்தீர்களே. நான் தினமும் தேவாலயத்தில் உங்களுடன் இருக்கையில் நீங்கள் ஏன் பிடிக்கவில்லை. "இதுவோ உங்கள் வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது" என்றார். அவர் சீடர்களில் ஒருவரான பேதுருவைத் தவிர மற்ற யாவரும் ஓடிவிட்டனர். கூட்டத்தினர் பேதுருவை அடையாளம் காட்டினர். ஆனால் பேதுருவோ நான் அல்ல என்று ஒரு முறையல்ல, மூன்று முறை கூறிவிட்டான். இந்த அறியாமைக்கு தனிமையிலே மனங்கசந்து அழுதான் என்று விவிலியம் கூறுகிறது. சட்டம் கட்டழிந்த காட்சி :மக்கள் கூட்டத்தினர் இயேசுவை குட்டினார்கள், முகத்தில் காறி துப்பி அறைந்தனர். உன்னை அடித்தவன் யார் என்று ஞான திருஷ்டியில் சொல் என்று ஏளனம் பண்ணினார்கள். இரவில் ஆலோசனை சங்கத்தின் முன் :இயேசுவை பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டு சென்றனர். மற்ற மதவாதிகளும் அங்கிருந்தனர். கொலை செய்ய பொய் சாட்சிகளைத் தேடினர். அகப்படவில்லை. கடைசியில் நீ "தேவனுடைய குமாரனா" என்றனர்.இயேசு : "நீங்கள் சொல்கிற படியே நான்" என்றார். உடனே வேறு சாட்சி தேவையில்லை. இவரே தன் வாயினால் சொல்லக் கேட்டோமே என்றனர். ரோம தேசாதிபதியாகிய பிலாத்துவின் முன்: பொழுது விடிந்துவிட்டது. ஆலோசனைச் சங்கத்தினர் இயேசுவை பிலாத்துவிடம் அழைத்துச் சென்று அவர் பேரில் சாட்டிய குற்றச்சாட்டுக்கள் : - தன்னை கிறிஸ்து என்னப்பட்ட ராஜா என்பது.- ராயருக்கு வரி கொடுக்க வேண்டியதில்லை என்று சொல்லி மக்களை கலகப்படுத்துவது. பிலாத்து யாவற்றையும் கேட்டு, இயேசுவை நோக்கி "நீ யூதருடைய ராஜாவா" என்று கேட்க, "நீர் சொல்கிறபடி தான்" என்றார். யூதார் மரணம் : இதற்கிடையில் யூதார், ஒரு குற்றமுமில்லாத இயேசுவை தான் காட்டிக் கொடுத்ததினாலே அவர் மரண தண்டனை அடைவதை உணர்ந்து மனம் உடைந்தான். அவன் காட்டிக் கொடுக்கப் பெற்ற பணத்தை தேவாலயத்தில் எறிந்து விட்டு தூக்கில் உயிர்விட்டான்.
இயேசு நாதர் சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகள்!
இயேசுநாதர் இப்பூவுலகில் மண்ணின் மைந்தனாக அவதரித்தது வரலாறு என்பதை யாவரும் அறிவர். சரித்திரச் சான்றுபடி அவர் பிறப்பு கி.மு. 4-5 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இயேசு நாதர் ஏறக்குறைய (33 1/2) ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தார். அவர் பிறந்த நோக்கத்தின்படி மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத எல்லாவித தீய சக்திகளையும், மூட மத கோட்பாடுகளையும், ஆதிக்க போக்கையும் எதிர்த்தார். மக்களிடையே பல அதிசயங்களை செய்தார். இம்மாய உலக வாழ்வை விட தேவனுடைய ராஜ்யத்தை தேட மக்களிடையே போதித்தார். இந்த இறையரசனின் வழிகளை அன்றிருந்த அரசும், யூத மதவாதிகளும் ஏற்க மறுத்தனர். மாறாக இவர் மேல் பழி சுமத்தி சிலுவையில் அறைய திட்டமிட்டனர். சிலுவையில் இயேசு :அந்த நாட்களில் கொடூர செயல் புரிந்த குற்றவாளிகளையும், (அல்லது) ஒருவரை சமூகத்தில் மிகக் கேவலமாக நடத்த வேண்டுமானாலும் சிலுவையில் அறைவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதன்படி தங்கள் மனம் நிறைவடைய இயேசு நாதரை சிலுவையில் அறைந்தனர். அவர் சிலுவையில் அறையப்பட்டு உயிர் விடுமுன் 7 வார்த்தைகளைச் மொழிந்தார். ஏழு வார்த்தைகள் : 1) "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" (லூக்கா 23 : 34) 2) "இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (லூக்கா 23 : 43) 3) தம்முடைய தாயை நோக்கி : "அம்மா, இதோ, உன் மகன் என்றார்". சீடனை நோக்கி : "இதோ உன் தாய் என்றார்" (யோவான் 19 : 26-27) 4) "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்" (மத்தேயு 27 : 46) 5) எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக : "தாகமாயிருக்கிறேன் என்றார்" (யோவான் 19 : 28) 6) இயேசு காடியை வாங்கின பின்பு, "முடிந்தது" என்று சொல்லி தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவான் 19 : 30) 7) பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார். இப்படிச் சொல்லி ஜீவனை விட்டார். (லூக்கா 23 : 46)
உளம் கனிந்த கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!
“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” என்று தன்னை நாடி வந்த மக்களுக்கு கர்த்தராகிய ஏசு கிறிஸ்து உறுதியளித்தார்.மானுட இனத்தை மட்டுமின்றி, மரம், செடி, கொடிகள் உட்பட தான் இப்புவியில் படைத்த ஜீவன்கள் அனைத்தையும் நொடிப்பொழுதும் கைவிடாமல் காத்துவரும் இறைவன், எவருடைய வேண்டுதலையும் மறுப்பதில்லை என்பதை மானுடத்திற்கு உணர்த்தவே தேவ குமாரராகிய ஏசு கிறிஸ்து இவ்வாறு கூறினார் (மத். அதி. 7.7). அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், நமக்கு ஏற்படும் துன்பங்கள், துயரங்கள், எல்லாம் பெற்றிருந்தும் எதுவுமே இல்லாதது போன்ற வரண்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை நன்கு அமைந்திருந்தும் சமூக வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் உரசல்கள், வாழ்வை கேள்விக்குறியதாக்கும் மோதல்கள் என்று மனிதன் அமைதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் ஏங்கித் தவிக்கும் போது, அவனது நெஞ்சத்தில் பிறக்கும் கேள்விகள், தேடல்கள். அந்த நிலையில் மானுடன் தனது கேள்விகளுக்கான பதிலை எதிர்பார்த்து இறைவனை நோக்கி திரும்புகிறான். அறிவு கொண்டு சிந்தித்து உரிய பதில் கிட்டாமல், மேற்கொண்டு செல்ல பாதை தெரியாமல், திக்கற்ற நிலையில் அவனுடைய மனதிலிருந்து எழுந்த கேள்விக்குத்தான் ஆண்டவர் அளித்த பதில், “கேளுங்கள் கொடுக்கப்படும்... தட்டுங்கள் திறக்கப்படும்” என்பது. தேவ குமாரர் அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மேலும் கூறுகிறார் : “ஏனென்றால் கேட்பவன் எவனும் பெற்றுக் கொள்கின்றான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுக்கிறவனுக்கு திறக்கப்படும்” என்று உறுதி கூறியதோடு நிற்காமல், நீங்கள் கேட்பவற்றையே இறைவன் வழங்குவார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்: “உங்களில் எந்த
மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்கு கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பானா?” என்று கேட்டுவிட்டு கூறுகிறார்: “ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (மத்தேயு அதி.7. 9,10,11). நமது வாழ்க்கையில் நாம் கடைபிடிக்கும் சுய நல போக்குகளும், தான்தோன்றித்தனமாக செயல்களுமே நமது துன்பங்களுக்கு காரணம் என்பதையுணர்த்தி, அதனைத் தவிர்க்க ஏசு பெருமான் கூறுகிறார், “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள், இதுவே நியாயப் பிரமாணமும் தீர்க்க தரிசனங்களாகும்” என்று வழிகாட்டியுள்ளார். வாழ்க்கை நடைமுறைகளில் நாம் கடைபிடிக்கவேண்டிய அணுகுமுறையையும், கொள்ளவேண்டிய மனப்பான்மையையும் இவ்வாறு தெளிவாக கூறியுள்ள ஏசு கிறிஸ்து, ஆன்மீகப் பாதையையும் அற்புதமாய்க் காட்டியுள்ளார். இறைவனை அடைய தேவ குமாரர் காட்டிய வழி!
ஜீவிதத்திற்கான வழியையும், அணுகுமுறையையும் காட்டியதோடு நிற்கவில்லை, இறையனுபவத்தை பெறுவதற்கான வழியையும் காட்டுகிறார் தேவ குமாரர். இதோ அவர் கூறியது: “இடுக்கான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; (இறையுலகின்) வாசலிற்க்குப் போகும் வழி விரியும்; வழி விசாலமுமாயிருக்கிறது; அந்த வழியில் பிரவேசிப்பவர்கள் அனேகர்.” என்றும், “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்றும் கூறி தெளிவாக வழிகாட்டியுள்ளார் (மத். அதி.7.13,14). நம்முடைய புறத்தை நாடும் புத்தியையும், புலன்களையும் அடக்கி நமது ஜீவனின் உட்சென்று நமது உண்மையறிய கர்த்தர் வழிகாட்டியுள்ளார் என்று மேற்சொன்ன விவிலிய வாசகங்களை விளக்கிக் கூறியுள்ளனர் ஆன்மீக முன்னோடிகள். நம்மை நாமறிந்து இறைவனின் பாதையில் நடப்பதை திசை திருப்பக்கூடிய போலிகளையும் கர்த்தர் அடையாளம் காட்டியுள்ளார்: “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்தில் அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்” என்று கூறியது மட்டுமின்றி, அவர்களின் செயல்களால் அவர்களை அடையாளம் காணுங்கள் என்றும் எச்சரித்துள்ளார்: “அவர்களுடைய கனிகளால் (செயல்களால்) அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சைப் பழங்களையும், முட்புதர்களில் அத்திப் பழங்களையும் பறிக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பி அடையாளம் காட்டியுள்ளார். தன்னை கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவர்கள் அல்ல, “பரலோகத்திலிறுக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி நடக்கின்றவனே பரலோக சாம்ராஜ்யத்தில் பிரவேசிப்பான்” என்று உறுதியாகக் கூறியுள்ளார் தேவ குமாரர். இப்படி வாழ்வையும் விளக்கி, அதனை எதிர்கொள்வதற்கு வழியும் காட்டி, இறைவனை நாடச் சொல்லி, அதற்கான ரகசியத்தையும் எடுத்துரைத்து ஒரு முழு வழி காட்டியாய் வாழ்ந்தார் தேவ குமாரர். கர்த்தர் பிறப்பு இவ்வுலகிற்கு நல் வழிகாட்டியது, அவரது உலக வாழ்வின் முடிவு நம்மை, நாம் வாழும் இவ்வுலகை புனிதப்படுத்தியது. நமது வாழ்வின் ஒளியாய் திகழும் கர்த்தரின் பிறப்பை உளமார மகிழ்ந்து கொண்டாடுவோம். அவர் காட்டிய உண்மைப் பாதையில் நடந்து அவர் உறுதியளித்த பரலோக சாம்ராஜ்யத்தை வரவேற்கத் தயாராவோம்.
உளம் கனிந்த கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!